சுப்பிரமணிய பாரதியார்
சுப்பிரமணிய பாரதியார்
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் சின்ன சாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு, 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப் பட்டார். 1887ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.
தனது பதினோறாம் வயதில் பள்ளியில் படித்து வரும் பொழுதே கவிதை எழுதும் ஆற்றலை பெற்றிருந்தார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார்..பிறகு அப்பணியை விடுத்து காசிக்குச் சிலகாலம் சென்றார்.
1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண் மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்த பின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும், மதுரையில் சேதுபதி மேல் நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற் றினார்.
பாரதி, தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகிய வற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க் கவும் செய்துள்ளார். பல இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக வெவ்வேறு சமயங்களில் பணியாற்றினார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் இந்தியா என்ற வார இதழிலும், சூரியோதயம், கர்மயோகி தர்மம் என்ற இதழ்களிலும், பாலபாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் "இந்தியா" பத்திரிகை புதுவையில் வெளியானது.
சென்னையில் காவல் துறை உத்தரவு மூலம் பாரதி யார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு, புத்தகங்கள் பறி முதல் செய்யப் பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சட்ட சபையில் விரிவான விவாதம் நடந்தது. விடுதலைப் போராட்டக் காலத்தில் தேச பக்தி பாடல்கள், கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாகப் போற்றப்படுகிறார்.
தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமை கொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித் தல மனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்யுவோம் என்று நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவு கண்டவர்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேசவிடுதலைக்கு முன்பாகவே உயிர் நீத்தார்.
பாட்டுக்கொரு புலவன் பாரதி, பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவர். இவருக்கு முன் உள்ள கவிஞர்கள் இலக்கணம் சிறிதும் வழுவாமல், கற்றோர் மட்டும் அறிந்து கொள்ளும்படி இலக்கண முறையில் பாடி வந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை எனப் புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வகையில் வசனமாகவும், கவிதையை தமிழுக்குத் தந்தவர். கேலிச்சித்திரம் (caricature) வரையும் முறையைத் தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும் பெண்களின் கல்வியறிவுக்காக சட்டங்களைச் செய்திட கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்ல சாதனை படைக்கவும் பெண்கள் தகுதி படைத்தவர்கள் என்று சாடினார்.
தமிழக அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியாரின் நினைவாக எட்டயபுரம், சென்னை திருவல்லிக்கேணி, புதுச்சேரி ஆகிய ஊர்களில் அவர் வாழ்ந்த இல்லம், நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப் பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை அமைக்கப்பட்டு 13/02/2000 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் காட்சியும் வைக்கப் பட்டுள்ளது.
1921 ஆம் ஆண்டு சூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய் வாய்ப்பட்டார். கோவில் யானையால் தாக்கப் பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப் பட்டார். பிறகு 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 12 அதிகாலை 01:30 மணிக்கு இறந்தார். யானை மிதித்து இறந்ததாகத் தகவல்கள் இருந்தாலும், நோய் வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
குறிச்சொற்கள்: