கும்பகோணம் வெற்றிலைக்கு வெற்றி கிடைத்தது புவிசார் குறியீடு தஞ்சாவூர் ஹேப்பி இது வெத்தல ஸ்பெஷல்
கும்பகோணம் வெற்றிலைக்கு வெற்றி கிடைத்தது புவிசார் குறியீடு தஞ்சாவூர் ஹேப்பி இது வெத்தல ஸ்பெஷல்
கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. முதல்முறையாக விவசாய பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சாவூர் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.. அதேபோல, தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. தேசிய அளவிலான அங்கீகாரத்தை நினைத்து கன்னியாகுமரி மக்களும் குஷியில் உள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்துவமாக உற்பத்தியாகக் கூடிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இதனை மத்திய அரசு வழங்குகிறது.. இந்த குறியீடு பெறப்படுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட பொருட்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைத்துவிடுகிறது..
அத்துடன், புவிசார் பெற்ற பொருட்களை வியாபார நோக்கத்தோடும், போலியாக வேறு பெயர்களில் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும். இதனால் புவிசார் குறியீடு அங்கீகாரம் தனிநபருக்கான உரிமை இல்லை. மேலும், அந்த பகுதியில் உள்ள அனைவருக்குமான உரிமையாகவும் இது கருதப்படுகிறது.
முறையான ஆவணங்கள் - சரியான அங்கீகாரம்
குறிப்பிட்ட ஊர்களில் தயாரிப்பதால் மட்டுமே இந்த அங்கீகாரம் கிடைத்துவிடாது.. அந்த பொருட்களின் தனித்தன்மை, தயாரிக்கும் முறை, விளைவிக்கப்படும் செயல் முறை உள்ளிட்ட பல்வேறு விதமான தகவல்கள் ஆவணங்களாக சேகரிக்கப்படும்.. இந்த ஆவணங்களுடன் சேர்த்து மத்திய அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும். உடனே மத்திய அரசும், அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து, ஆராய்ந்து அதற்கான குறியீட்டை வழங்கும்.
அந்தவகையில், நம்முடைய தமிழகத்துக்கு இதுவரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளன.. அதாவது, பல்வேறு உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
உதாரணத்துக்கு மதுரை மல்லி, காஞ்சிபுரம் பட்டு, சேலம் சுங்குடி சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழநி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு போன்றவற்றை சொல்லலாம்.
மீண்டும் புவிசார் அங்கீகாரம்
அந்தவகையில், இப்போதும் கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. முதல்முறையாக விவசாய பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில்கூட, மதுரை மரிக்கொழுந்து மற்றும் விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டிருந்தது.. இப்போது, கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் வெற்றிலை - ஸ்பெஷாலிட்டி
இப்போது கும்பகோணம் வெற்றிலைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், தஞ்சாவூர் மக்களே மகிழ்ச்சியில் உள்ளனர்.. காரணம், கும்பகோணம் வெற்றிலை என்று சொன்னாலும், திருவையாறு, திருப்பந்துருத்தி, கண்டியூர், நடுக்கடை, பாபநாசம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலிருந்துதான் வெற்றிலை அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.. இங்கிருந்து மாதத்திற்கு 3 கோடி ரூபாய்க்கு வெற்றிலை வர்த்தகம் நடக்கிறது.
அதுமட்டுமல்ல, கும்பகோணம் வெற்றிலை சுவையே அலாதியானது.. பார்ப்பதற்கு சின்ன சைஸில்தான் இருக்கும். ஆனால் மென்மையாவும், ருசியாகவும் இருக்கும்.. காரத்தன்மை, அதிகமாகவும் இல்லாம, குறைவாகவும் இல்லாம நடுத்தரமாக இருக்கும்.
அதைவிட முக்கியம், இந்த வெற்றிலை சீக்கிரமாக வதங்கிவிடாது.. கொடியிலிருந்து பறித்தாலும், பார்ப்பதற்கு ஃபிரஷ்ஷாக இருக்கும். அதையும்விட முக்கியமானது, வெற்றிலை விளைச்சலுக்கு தேவைப்படும் காவிரி தண்ணீரும் மண்ணும்தான் என்பதை மறுக்க முடியாது..!!
குறிச்சொற்கள்: