உயிர் காக்கும் தோழன் சைக்கிள்
உயிர் காக்கும் தோழன் சைக்கிள்
நம்மிடையே தற்போது மறைந்துவரும் முக்கியபழக்கம் சைக்கிள் ஓட்டுதல், பெரும்பாலான கல்லூரிகளில் சைக்கிள் ஸ்டாண்டுகள், பைக் ஸ்டாண்டுகளாகவும், கார் ஸ்டாண்டுகளாகவும் மாறிவிட்டன. வருங்காலத்தில் சைக்கிள் என்ற வாகனம், அருங்காட்சியகத்தில் மட்டும் இருக்கும் என்ற நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் உள்ளது.
1839ல் மேக்மில்லன் என்பவரால் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது,. ஆரம்பத்தில் வெளாசிட்ட என்ற பெயரிடப்பட்டு, பிற்காலத்தில் சைக்கிள் என மாறியது. பின்னர் டன்லப் என்பவரால் ரப்பர் சக்கரம் கொண்டதாக சைக்கிள் மாற்றியமைக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் முக்கியமாக சுவிட்சர்லாந்து, நெதர்லாந்தில் மக்கள் அலுவலகங்களுக்கு, பள்ளிகளுக்கு சைக்கிளில் செல்வதைத் தான் விரும்புகிறார்கள். சாலைகளில் இருபுறமும் சைக்கிள் செல்வதற்கு நேர்த்தியாக தளம் அமைத்து, சைக்கிளில் செல்வதை ஊக்குவிக்கிறார்கள். நமது நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. அதிகமாக மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதால் சுற்றுப்புற சூழ்நிலை அசுத்தமாக மாறி நுரையீரல் தொடர்பான நோய்கள் அதிகமாகி வருகிறது. மேலை நாடுகளில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள் கூட சைக்கிளில் செல்வதை விரும்பும் போது நமது நாட்டில் அது தகுதி குறைவு என்ற நிலை வந்துவிட்டது.
தினமும் 8 கி.மீ சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் பல.
- சைக்கிள் ஓட்டுவது உடலை வருத்தி செய்யக்கூடிய பயிற்சி அல்ல. எனவே மிகவும் மோசமான இதயநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை தவிர எல்லோருமே சைக்கிள் ஓட்டலாம்.
- சைக்கிள் ஓட்டும் போது உடம்பில் உள்ள அனைத்து தசைகளும் பயன்பாட்டில் இருக்கின்றன.
- உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப வேகமாகவும் ஓட்டலாம். மெதுவாகவும் ஓட்டலாம்.
- சைக்கிள் ஓட்டும் போது நல்ல ஆரோக்கியமான ஆக்ஸிஜனை நாம் சுவாசிக்கிறோம்.
- நமது உடம்பில் உள்ள மூட்டுகளில் இறுக்கும் தன்மை மாறி, பலுவான மூட்டாக மாற்றுகிறது. எனவே மூட்டுகளை நன்றாக மடக்கி நீட்டி வேலை செய்ய முடியும்.
- எலும்புகளை பதப்படுத்தி உறுதிப்படுத்துகிறது, உடல் கொழுப்பைக் குறைக்கிறது.
- சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, மிகை கொழுப்பு தொடர்பான நோய் வராமல் பாதுகாக்கிறது.
- மார்பக புற்றுநோய், உடல் புற்றுநோய்கள், பக்கவாதம் வராமலும் தடுக்கிறது.
- மனநிம்மதியை கொடுக்கிறது. மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஏற்படாமல் தடுக்கிறது.
- தினமும் சைக்கிள் ஒட்டும் பயிற்சி செய்வதால், இதயத்தில் புது ரத்தநாளங்கள் ஏற்படுகின்றன. இவை இதயத்தசை நார்களில் அதிகமான ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இதனால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது.
- சர்க்கரை நோயாளிகள் சைக்கிள் ஓட்டும் போது இன்சுலினுடைய வேலைத்திறன் அதிகமாகிறது. ஆதலால் குறைந்த அளவு இன்சுலினால் அதிக அளவு நன்மை கிடைக்கிறது.
- காலில் உள்ள அனைத்து தசைகளுக்கும் சைக்கிள் பயிற்சி வலுவைக் கொடுக்கிறது. முக்கியமாக பாதங்களில் உள்ள சிறிய தசைகள் வலுவாக மாறுகின்றன.
- சைக்கிள் பயிற்சி தசை நார்களை வலுவாக்குவதுடன் விரை வீக்க நோய் வராமல் பாதுகாக்கின்றன.
- நமது கைகளில் உள்ள சிறிய தசை நார்களும் சைக்கிள் ஓட்டும் போது வலுவாகின்றன. இதனால் எழுதுவது போன்ற விரல்களால் செய்யப்படும் வேலைகளை துல்லியமாக செய்யமுடிகிறது.
- மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகமாவதுடன், சிறுமூளையின் வேலைத்திறன் அதிகமாகிறது.
- தோலுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் அரிப்பு, புண் வராமலும் தடுக்கிறது.
- தினமும் சைக்கிள் ஓட்டினால் மலச்சிக்கல் வராது. வேலைத்திறன் அதிகரிப்பு மேலை நாடுகளில், பள்ளி மாணவர்களிடையே இந்த பயிற்சியை கட்டாயமாக்கியதால், மாணவர்களின் வேலைத்திறன் அதிகமானது என ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு தனிமனிதனின் உடல்நலக் குறைவு, ஒரு குடும்பத்தை பாதிக்கும்.. பள்ளிக்கு, வேலைக்கு செல்வோர் அனைவரும் சைக்கிளிலேயே சென்றால், எத்தனையோ மனித உயிர்களை காப்பாற்றலாம். அது மட்டுமல்லாமல் நாம் சுவாசிக்கும் காற்றும் சுத்தமானதாக மாறும்.
- அன்றாட வேலைகளுக்கு சைக்கிளை பயன்படுத்துவதால், உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சிகளுக்கு தனியாக நேரம் ஒதுக்க தேவையில்லை. மிக அவசர வேலைகளுக்கு கார், இருசக்கர வாகனம் பயன்படுத்தலாம்.
- தினமும் சைக்கிள் ஓட்டுபவர்கள் அதிக நாள் வாழ்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. எனவே சைக்கிள் என்பது உயிர் காக்கும் தோழன். ஏரோபிக் உடற்பயிற்சிகள், எடை உடற்பயிற்சிகள், நீட்டி மடக்கும் உடற்பயிற்சிகள் என உடற்பயிற்சிகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம். நடைப்பயிற்சி மட்டும் மேற்கொண்டால் நடப்பதற்கு பயன்படும் தசைகள் வலுப்படுமே தவிர, மற்ற தசை நார்களை வலுப்படுத்தாது. அதை போல் நீட்டி மடக்கும் பயிற்சிகள் உடம்பில் மூட்டை சுற்றியுள்ள தசை நார்களை வலுவுடையதாக்கும். சைக்கிள் ஓட்டுவதன் மூலம் இந்த மூன்று வகையான பயிற்சிகளையும் ஒரே பயிற்சியில் செய்ய முடியும்.
- நாம் செலவழிக்கும் கலோரி அளவு உடல்எடை மற்றும் சைக்கிள் ஓட்டும் நேரம், வேகம் ஆகியவற்றை பொறுத்தது.
- உதாரணமாக 60 கிலோ எடையுள்ள ஒருவர் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டினால் ஏறக்குறைய 480 கலோரிகள் செலவழிக்கலாம். 480 கலோரி அளவு என்பது 100 கிராம் உருளைக்கிழங்கில் உள்ள கலோரி அளவு ஆகும்.
- குறைந்தபட்சம் வாரத்தில் மூன்று நாட்கள் சைக்கிள் ஓட்டி அலுவலகத்திற்கு செல்லலாம். பெட்ரோல் செலவு குறையும்.
- அசையாத சைக்கிளில் தனி அறையில் ஓட்டுதலை விட, ஓடும் சைக்கிளில் திறந்த வெளியில் ஓட்டுதலே சிறந்தது.
- ஆரம்ப நிலையில் சற்று மெதுவாக சைக்கிள் ஓட்டலாம். நமது நாடு வளர்ந்து வரும் நாடு, வசதி படைத்த வளர்ந்த நாடுகளில் சைக்கிள் ஓட்டுதல், மக்களிடையே அன்றாட வாழ்க்கையில் ஒரு நிகழ்வாக இருக்கும் போது, வளரும் நாடான நாம் சைக்கிளை ஒதுக்கி தள்ளுவது முறையாகுமா?... யோசியுங்கள தோழர்களே….யோசியுங்கள்…
குறிச்சொற்கள்: